Tuesday, July 6, 2010

சாதனையா இல்லை வேதனையா...?

சுதந்திர இந்தியாவின் சரித்திரம் எழுதப்படும்போது,​​ தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் என்றும்,​​ ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் பிரதமர் பதவியில் நீடிக்க முடிந்த நேரு குடும்பத்தைச் சேராத முதல் நிர்வாகி என்றும்,​​ சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பிரதமர் என்றும் பதிவு செய்யப்படுமே தவிர,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொல்லிக் கொள்ளும்படியான சாதனை வேறு ஏதாவது இருக்குமா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.​ பதவியில் எத்தனை நாள்கள் இருந்தோம் என்பதைவிட,​​ எப்படிப் பதவி வகித்தோம் என்பதுதான் முக்கியம் என்பதை யாராவது நமது பிரதமருக்குச் சொன்னால் நலம்.

""நான் ஓய்வுபெறும் கேள்வியே எழவில்லை.​ எனக்குத் தரப்பட்டிருக்கும் வேலைகள் முடியாமல் இருக்கின்றன.​ அவற்றை முடிக்கும் வரை ஓய்வு என்கிற கேள்விக்கே இடமில்லை'' என்று பதிலளித்த கையோடு ""இளைஞர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.​ அப்படி ஓர் இளைஞரைக் கட்சி தேர்ந்தெடுக்கும்போது அவருக்கு இடமளிக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று அடுத்த கேள்விக்குப் பதிலளித்திருப்பதிலிருந்தே,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தரப்பட்டிருக்கும் வேலை என்ன,​​ யாருக்காக வழிவிட அவர் தயாராக இருக்கிறார் என்பதை எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இட்ட கட்டளையைச் செய்து முடிக்கும் நம்பகமான அதிகாரியாகத் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த மன்மோகன் சிங்,​​ பிரதமராகவும் அந்தப் பணியைத் திறம்பட வகிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.​ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அரசின் முதலாண்டு நிறைவை ஒட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமரின் பதில்கள்தான் மேலே குறிப்பிட்டவை.​ "தம்பி எப்போது வருவாய்.​ அப்போது எந்தவிதத் தயக்கமோ,​​ வருத்தமோ இல்லாமல் நான் திண்ணையைக் காலி செய்து கொடுத்து விடுகிறேன்'' என்று கட்சித் தலைவி சோனியா காந்திக்குத் தனது விசுவாச உறுதிமொழியைப் பகிரங்கமாகப் பத்திரிகை நிருபர் கூட்டத்தின் மூலமாகத் தெரிவித்திருக்கிறார் பிரதமர்

முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியில்,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள்.​ கூட்டணிக் கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டிய நிர்பந்தங்கள்.​ இடதுசாரிகளின் ஆதரவை இழக்க முடியாத தர்மசங்கடம்.​ ஆனால்,​​ இந்த முறை அப்படி எந்தவிதமான கட்டுப்பாடுகளும்தான் இல்லையே,​​ பின்னும் ஏன் இந்த ஓராண்டு ஆட்சியில் சாதனை என்று சொல்லிக் கொள்ளப் பெரிய அளவில் எதுவுமே இல்லை?

இந்த முறை மன்மோகன் அரசு முன்வைத்த எந்தவொரு முக்கியமான முடிவையும் செயல்படுத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று பத்திரிகையாளர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை.​ அணு விபத்து நஷ்டஈடு மசோதாவும் சரி,​​ மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் சரி,​​ நாடாளுமன்றத்தில் குறைப் பிரசவமாகி விட்டதே,​​ ஏன்?​ சர்க்கரை ஏற்றுமதி இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஐ.பி.எல்.​ ​ ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட தேசியவாத காங்கிரûஸப் பகைத்துக் கொள்ள முடியாமல்,​​ சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறதே,​​ ஏன்?

மேலே குறிப்பிட்ட எல்லாமே அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் பற்றியவை.​ இதில் பிரதமர் சமர்த்தர் அல்லர் என்று அவரே ஏற்றுக்கொள்வார்.​ ஆனால்,​​ நிதிநிர்வாகத்தின் மேதை என்று ​ ​ ​வர்ணிக்கப்படும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரும்,​​ முன்னாள் நிதியமைச்சருமான பிரதமர் மன்மோகன் சிங்கால்,​​ விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையே,​​ ஏன்?​ பங்குச் சந்தையிலிருந்து,​​ பிளாட்ஃபார வியாபாரம் வரை எதுவுமே நமது அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்கிற விபரீத நிலைமை அல்லவா ஏற்பட்டிருக்கிறது.​ "கார்ப்பரேட்' கொள்ளைகளும்,​​ குளறுபடிகளும்,​​ ஊழல்களும் எந்தவிதமான கட்டுப்பாடோ,​​ பயமோ இல்லாமல் தொடர்வதை வேடிக்கை பார்க்கும் மௌனியாக ஒரு பிரதமர் தொடர்கிறார் என்பதும்,​​ அவரது அரசில் அங்கம் வகிக்கும் பலர் இந்தச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதும் சாதனையா இல்லை வேதனையா?

தேசத்தை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் என்று மீண்டும் ஒருமுறை மாவோயிஸ்டு தீவிரவாதத்தை வர்ணித்திருக்கிறார் பிரதமர்.​ ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் பிரதமராகப் பதவி ஏற்றபோது இதையேதான் சொன்னார்.​ இப்போதும் சொல்கிறார்.​ ஆறு ஆண்டுகளாகியும் தான் மிகப்பெரிய சவால் என்று கருதும்,​​ ஒரு பிரச்னையைச் சமாளிக்க முடியாமல்,​​ விடைகாண வழி தெரியாமல் தவிக்கும் ஒருவர் நமது பிரதமராகத் தொடர்கிறார்.

மக்களாட்சியில்,​​ எவ்வழி மக்கள்,​​ அவ்வழி மன்னவன்.​ பிரதமர் மன்மோகன் சிங்,​​ இந்திய ஜனநாயகத்தின் சாதனையா இல்லை வேதனையா...?
 An article from Dinamani.

No comments:

Post a Comment