Tuesday, July 6, 2010

செம்மொழி என்பது என்ன?

செம்மொழி (Classical language)என்பது ஒரு மொழியை அதன் தொன்மை, இலக்கிய வளம் ஆகிய அடிப்படையிலும் இன்ன பிற தகுதிகளையும் கொண்டு செய்யப்படும் வகைப்பாடு ஆகும்.
  • செம்மொழி என்று கருதப்படுவதற்கு அந்த மொழியானது மிகத் தொன்மையானதாக இருக்க வேண்டும்.
  • மொழியின் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராமல் நிகழ்ந்திருக்க வேண்டும்.
  • மொழியானது பிறமொழிகளைச் சார்ந்து இராமல் தனித்து இயங்குதல் வேண்டும்.
  • தனக்கென சுயதன்மையுள்ள பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும்,மொழியின் பாரம்பரியமானது பிற இனம் அல்லது மொழியின் பாரம்பரியத்தைச் சார்ந்திருக்காமல் சுயமாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்.
  • மொழியில் வளமான பழங்கால இலக்கியங்கள் இருக்க வேண்டும்.
உலகின் செம்மொழிகள் :
  • தமிழ்
  • கிரேக்க மொழி
  • சமஸ்கிருதம்
  • இலத்தீன்
  • பாரசீக மொழி
  • அரபு மொழி
  • எபிரேயம்
  • சீன மொழி
தமிழ் ஏன் செம்மொழி?
  1. திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கியப் பழமை வாய்ந்த மிகத் தொன்மையான மொழி. இந்தியாவில் உருவான பிற மொழி இலக்கியங்கள் யாவும் தமிழில் உருவாகிய தொல்காப்பியத்திற்கு பிறகாகவே தோன்றின.
  2. தமிழ் எந்த மொழியையும் சார்ந்திருக்கவில்லை.தமிழின் யாப்புகள், இலக்கண வரையறைகள் யாவும் சுயசார்புத் தன்மையுடன் உருவானவை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழின் இலக்கியங்கள் பிற எந்த மொழி இலக்கியத்தின் சாயலுமற்ற தனித்தன்மையானவை.
  3. தமிழ் மொழியின் இலக்கியங்கள் உலகின் செம்மொழிகளின் இலக்கியங்களோடு இடம்பெறுவதற்கான தகுதிகளில் எந்த விதத்திலும் தாழ்ந்தவையன்று. தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் போன்றவை உள்ளன.
  4. தமிழ் நவீன இந்தியாவின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் தேவையான அடிப்படையை வழங்கிய தனித்து இயங்கும் மொழி. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் உதவுதது போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தேவையாக உள்ளன.

இவை போன்ற இன்னும் பல தனித்துவமும் பெருமையும் மிக்க பண்புகளால் தமிழ் மொழியானது இந்திய நடுவண் அரசால் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment